மலேசியாவின் ட்ரோன் துறையை வரும் 2030-ஆம் ஆண்டிற்க்குள் 50.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தொழில்துறையாக மாற்றுவதுடன், பொதுச் சேவைகளில் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக, 2022–2030 மலேசிய ட்ரோன் தொழில்நுட்ப செயல் திட்டம் மூலம், உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை, உருவாக்கும் நாடாக மலேசியாவை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் 2030-ஆம் ஆண்டிற்குள் உயர் பதவிகள் கொண்ட 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அமைச்சு, நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தேசிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சாண்ட்பாக்ஸ் திட்டத்தின் மூலம், உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்ப உருவாக்குநர்களுக்கு ஒழுங்குமுறை வசதிகள் மற்றும் சோதனைக்கான நிதியுதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.








