Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூசத்தை முன்னிட்டு 'மடானி பக்தி' திட்டம்: பத்துமலையில் மனித வள அமைச்சின் சிறப்புச் சேவைகள்
தற்போதைய செய்திகள்

தைப்பூசத்தை முன்னிட்டு 'மடானி பக்தி' திட்டம்: பத்துமலையில் மனித வள அமைச்சின் சிறப்புச் சேவைகள்

Share:

கோலாலம்பூர், ஜனவரி,28-

மலேசிய மடானி கொள்கையின் அடிப்படையில், மக்களிடையே ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், மனிதவள அமைச்சான கெசுமா சார்பில் 'மடானி பக்தி தைப்பூசம் 2026' திட்டம் பத்துமலையில் நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நான்கு நாட்களுக்குத் தொடர்ச்சியாகச் சிறப்புச் சேவைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இந்தியச் சமூகத்திற்குத் தேவையான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் தகவல்கள் வழங்கப்படவுள்ளன.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் ஜனவரி 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் ஆகியோர் பத்துமலைக்கு வருகை தந்து தைப்பூச முன்னேற்பாடுகளைப் பார்வையிடவுள்ளனர். இது அரசாங்கம் அனைத்துத் தரப்பு மக்களுடனும் கொண்டுள்ள இணக்கமான உறவையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது என மனித வள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், மனிதவள அமைச்சான கெசுமாவின் கீழ் உள்ள சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ, தொழில் திறன் பயிற்சியான HRD Corp, வேலை வாய்ப்புச் சந்தையான TalentCorp , NIOSH மற்றும் PTPK போன்ற துறைகள் பத்துமலையில் ஒருங்கிணைந்து செயல்படவிருக்கின்றன.

இதன் மூலம் இலவச ஆரோக்கியச் சோதனைகள், வேலை வாய்ப்பு வழிகாட்டல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவுகள் எனப் பல்வேறு பயனுள்ள சேவைகளைத் தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News