கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்போது அமலில் உள்ள பாதுகாப்பான பள்ளி மேலாண்மை வழிகாட்டுதல்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் பள்ளிகளில் நிகழ்ந்த விபத்துகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சு, பள்ளி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இது தெளிவாக காட்டுவதாக இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கல்வி நிறுவன பாதுகாப்பு சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இறுதிக்கட்டத்தில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக தேசிய தொழிற்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான நியோஷ் உட்பட நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நேற்று ஜோகூரில் 8 வயது மாணவி பள்ளியின் நுழைவாயிலில் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கல்வி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம், பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் முன்பாக 4 வயது மாணவி வேன் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








