முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் உத்தரவு, மலேசியாவில் இதுவரை இல்லாத ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல குற்றவியல் வழக்கறிஞர் டத்தோ என். சிவநந்தன் தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு சிறைச்சாலை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ், ஒரு வீடு அல்லது கட்டிடத்தை சிறைச்சாலையாக அறிவிக்க முடியும். இதன்படி நஜிப்பின் இல்லம், அவரது தண்டனையை அனுபவிக்கும் இடமாக அறிவிக்கப்படலாம். சிறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்னணு கண்காணிப்பு மற்றும் பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிபந்தனைகளை நிர்ணயிக்கலாம்.
இந்த முடிவு, இதுபோன்ற ஏற்பாட்டை விரும்பும் மற்ற கைதிகளும் விண்ணப்பிக்க வழிவகுக்கலாம் என்று சிவநந்தன் கூறினார். குறிப்பாக படித்தவர்கள் மத்தியிலான வெள்ளை காலர் குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் இதே கோரிக்கையை முன்வைக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட வேண்டும். மேலும், நஜிப்புக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு மட்டுமே பொருந்தும்; தனியான 1எம்டிபி வழக்கின் 15 ஆண்டு சிறைத்தண்டனை இதில் அடங்காது என்பதையும் அந்த முன்னணி வழக்கறிஞர் விளக்கினார்.








