முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த உதவும் வகையில், அம்னோ நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கவுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைமைத்துவம், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களில் ஆதரவு வழங்க விரும்புவோர் தங்களால் இயன்ற பங்களிப்பை தன்னார்வமாக வழங்க அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
இந்த நிதி திரட்டும் நடவடிக்கை வெளிப்படையாகவும், முறையாகவும், நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படும் என்று ஸாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.
நஜிப்புக்கு ஆதரவாக இந்த முடிவை அம்னோ வரவேற்பதாகவும், ஆரம்பம் முதலே அரச குடும்பம், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மதித்து, நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளின் ஊடாகவே இந்த விவகாரத்தை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.








