கோலாலம்பூர், ஏப்ரல்.19-
அம்பாங் ஜெயா, கம்போங் அம்பாங் இண்டா பகுதியில் இன்று மதியம் பெய்த கனமழையினால் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுச் சம்பவங்கள் பதிவாகின. இதில் ஒரு சம்பவத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றின் மீது மண் சரிந்து விழுந்தது.
முதல் சம்பவம் மதியம் 3.35 மணியளவில் ஒரு வீட்டின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் வீட்டின் கட்டமைப்பிற்கோ அல்லது குடியிருப்பாளர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு - மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் தெரிவித்தார். சுமார் 16 நிமிட இடைவெளியில் அருகிலேயே இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








