கோலாலம்பூர், பிப்ரவரி.23-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, பொதுப் பங்கு நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டிருந்தது தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் நிராகரித்துள்ளார்.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இது தொடர்பான அவசர விவாத மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கமளித்த சபாநாயகர் ஜொஹாரி அப்துல், இந்த விவகாரத்தை விசாரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், அந்த விசாரணையில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அக்குழு தனது பணியில் முழு கவனம் செலுத்துவதற்காகவும் இந்த விவாத மனுவை தாம் நிராகரிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.








