கோலாலம்பூர், நவம்பர்.16-
2025ஆம் ஆண்டில் இதுவரை 12 புதிய குரங்கம்மை நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் கவலைக்குரிய விதமாக, மேற்கு ஆப்பிரிக்கப் பயண வரலாறு கொண்ட ஒரு வெளிநாட்டு நபரைத் தொற்று மூலமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்குப் புதிய குரங்கம்மை கிளஸ்டர் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த சுகாதார அமைச்சு, நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அனைத்து நெருங்கிய தொடர்புகளும் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உறுதியளித்துள்ளது. காய்ச்சல், தோலில் கொப்புளங்கள் போன்ற குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் அச்சமின்றி உடனடியாகச் சுகாதார நிபுணர்களை அணுகுமாறும், நோய் அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்குமாறும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.








