கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கர மோதல் தொடர்பில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த மூன்று நபர்களுக்கும், அங்கு திடீரென நுழைந்த மற்ற ஐந்து பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது.
ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் "பாதுகாப்பு பணம் " வழங்குவது தொடர்பான இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் , "கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
28 முதல் 44 வயதுக்குட்பட்ட இந்த எட்டு பேரும் மார்ச் 3 முதல் 7 ஆம் தேதி வரை வெவ்வேறு தேதிகளில் தனித்தனியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தின் போது அவர்கள் போதையில் இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்குக் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற குற்றப் பின்னணிகள் இருப்பதும், ஒருவருக்குப் போதைப்பொருள் சோதனை முடிவுகள் சாதகமாக வந்திருப்பதும் கண்டறியப்பட்டது.
மோதலின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு கருப்பு ஹெல்மெட் மற்றும் இரும்பு குழாயைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று டத்தோ ஷசெலி விளக்கம் அளித்தார்.









