பேராக் தெங்கா மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த கெங் முன்சுங் எனும் கும்பலை முறியடித்து, அதன் தலைவன் உட்பட 11 உறுப்பினர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறையிலிருந்து விடுதலையான மூன்றே மாதங்களில், 27 வயதுடைய நபர் மீண்டும் இக்கும்பலை உருவாக்கி கடந்த ஜனவரி முதல் கைவரிசையைக் காட்டி வந்துள்ளார். கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 21 முதல் 46 வயதுக்குட்பட்ட 11 சந்தேக நபர்கள் பிடிபட்டதாகப் பேராக் தெங்கா மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டன் ஹாபிசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.
இக்கும்பலிடமிருந்து ஐந்து மோட்டார் சைக்கிள் பாகங்கள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் பெரும்பாலும் யமஹா 125ZR மற்றும் Y15ZR வகை மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து திருடி, அதன் பாகங்களை மலிவு விலைக்கு விற்று வந்துள்ளனர் என்று இன்று பாரிட்டில் பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சூப்பிரிடெண்டன் ஹாபிசுல் ஹெல்மி இதனை தெரிவித்தார்.
கைதானவர்களில் இருவர் போதைப்பொருள் உட்கொண்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுக் கும்பலில் மெக்கானிக்குகள் மற்றும் தகவல் கொடுப்பவர்களாகப் பாதுகாப்புப் படை வீரர்களும் செயல்பட்டு வந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கூடுதல் பூட்டுகளைப் பயன்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.








