சுங்கை பூலோ, பண்டார் புன்சாக் ஆலாம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய சந்தேக நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை போலீசாருக்கு புகார் கிடைத்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஹாஃபிஸ் முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி பிற்பகல் 3.25 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது, வீட்டின் பின்பக்கக் கதவு வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முஹமட் ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவ இடத்தின் அருகே வெள்ளை நிற சட்டை அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.








