பேராக் மாநிலத்தில் குறைந்தது ஓர் இரவு தங்கும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு தலா 40 ரிங்கிட் மதிப்புள்ள 2,000 பற்றுச்சீட்டுகளை வழங்கவுள்ளது.
பேராக் ஸ்டேய் அண்ட் எக்ஸ்புலோர் (Perak Stay and Explore) திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட பயண முகவர்கள், சுற்றுலா சங்கங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலா தொடர்பான சேவைகளில் இந்த பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.
சுற்றுலாப் பயணிகள் ஈப்போ நகரை மட்டும் பார்வையிடாமல் கோலா கங்சார், தைப்பிங், லெங்கோங், கோலா செபெத்தாங், பங்கோர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று அதிக நாட்கள் தங்குவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என மாநில சுற்றுலா, தொழில்துறை மற்றும் முதலீட்டுக் குழுத் தலைவர் லோ ஸீ யீ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தைப்பிங்கை மாநிலத்தின் முன்னணி வான்வழி விளையாட்டு சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லோ ஸீ யீ குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை வளங்கள் மற்றும் வான்வழி பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் காரணமாக லாருட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்கள் அதிக சுற்றுலா சாத்தியம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








