சரவாக் மாநிலத்தில் காற்று மாசுக் குறியீடு 500-ஐ தாண்டும் பட்சத்தில் அவசரநிலை அறிவிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அம்மாநில துணை முதல்வர் டாக்லஸ் உங்கா எம்பாஸ் தெரிவித்துள்ளார்.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான அவர், காற்று மாசு 500-க்கு மேல் சென்றால் அத்தியாவசிய சேவைகளைத் தவிர அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பணியிடங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய அமைப்புகளுடன் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேசிய தின நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதா, ஒத்திவைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பதை சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பொதுமக்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பப்படி முடிவு செய்யலாம் என்றும் டாக்லஸ் குறிப்பிட்டுள்ளார்.








