நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன மலேசியர்களை அடையாளம் காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மரபணுப் பரிசோதனைக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காணாமல் போன தனது 57 வயது மனைவி கலைமதி கருப்பையா குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவரது கணவர் சிவகுமார் காளிமுத்து, தானும் தனது மூன்று பிள்ளைகளும் மரபணுப் பரிசோதனைக்கு உட்பட வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று விஸ்மா புத்ராவில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சின் விளக்கக் கூட்டத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தனது மனைவியுடன் கடைசியாக தொலைபேசியில் பேசியதாகக் கூறிய சிவக்குமார், அப்போது மலேசியாவைச் சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் கைலாஷ் பகுதிக்கு பிரார்த்தனைக்காக செல்ல இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.








