நேபாள பெருவெள்ளத்தில், மிகப் பெரிய கட்டிடங்களே நொடிப் பொழுதில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு மாடி வீடு மட்டும் எந்தவித பாதிப்பும் இன்றி வலுவாக இருக்கும் காணொளி சமூக ஊடகவாசிகள் பலரையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவ்வீட்டைக் கட்டிய பொறியியலாளரை சமூக ஊடகவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக அவ்வீட்டைச் சுற்றியிருந்த மொத்த வீடுகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த ஒற்றை வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்கும் காணொளி வைரலாகி வருகின்றது.
நீரோட்டம் எந்த திசையில் செல்கிறதோ, அந்த அழுத்தத்தை தாங்கும் வகையில் தூண்கள், சுவர்கள் மிகவும் தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேபாளத்தின் கோஷி ஆற்றில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பகுதிகள் முழுவதையும் இந்த பெருவெள்ளமானது மூழ்கடித்தது.
இந்நிலையில், கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டேவின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் ஏரி உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 3000-த்திற்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.








