முறைகேடான நடவடிக்கைகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதியானது, மக்களுக்கே திருப்பி வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த நிதி குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற 69-ஆவது தேசிய தின உரையில் அன்வார் இதனை அறிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் செல்வம் மக்களால் அனுபவிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை எனக் குறிப்பிட்ட அவர், சட்டவிரோத செயல்கள் மூலம் நாட்டின் செல்வத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல் செயல்பட முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு நாட்டின் வளர்ச்சியின் பலன்கள் கிடைக்காமல் இருந்தால், “சுதந்திரம் என்பதன் அர்த்தம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இனம், மதம் என எந்த வேறுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய கவனமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அன்வார், “நமக்கு ஒரே தாயகம் – மலேசியா. இந்த நாட்டை நாம் மரபாகப் பெற்றுள்ளோம்; அதன் வெற்றிக்கு நாம் அனைவரும் பொறுப்பு,” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








