இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பைக் காண 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர், டத்தாரான் புத்ராஜெயாவில் திரண்டதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இன்றைய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறிய அவர், மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சபாவின் சண்டகான், ஜோகூர் பாரு, கிளந்தானின் ஜெலி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக வருகை புரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய தினத்தை முன்னிட்டு பலர் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பாக இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
அதேவேளையில், இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டம் நாட்டின் மீதான நமது அன்பை மேலும் ஆழப்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக சரவாக் மாநிலம் கூச்சிங்கில் நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.








