பேராக் மாநில தேசிய தினக் கொண்டாட்டம் இன்று ஈப்போ டவுன் ஹால் முன்பாக பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் மேன்மை தங்கிய பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா, அவரது துணைவியார் ராஜா பெர்மைசூரி துவாங்கு ஸாரா சாலிம் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அதிகாலை சுமார் 5 மணியளவில் ஆல்ட்ராமேன் (Ultraman) வேடத்தில் 40 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் முக்கிய விழா மேடை அருகே நுழைந்து நீண்ட நேரம் அங்கு சுற்றித் திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அரச குடும்பத்தினர் அமர வேண்டிய முக்கியப் பகுதி என்பதால், அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து போலீசார் அவரை உடனடியாக தடுத்து வைத்தனர்.
இது குறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் கூறுகையில், அந்த நபர் யாருக்கும் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும், தேசிய தின நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் முக்கிய மேடை அருகே நீண்ட நேரம் தங்கியிருந்த விதம் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் நடவடிக்கை எடுத்ததாக கூறினார். விசாரணையில் அந்த நபருக்கு ஏற்கனவே மனநலப் பிரச்சினை இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அந்த நபர் மேலதிக மருத்துவ மதிப்பீட்டிற்காக தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் முஹமட் அல்வி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த ஆண்டு பேராக் தேசிய தினக் கொண்டாட்டத்தில் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்போது, மாநில கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது சுல்தான் நஸ்ரினை நோக்கி ஓடிய பெண் ஒருவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர், அவருக்கும் மனநலப் பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவரது மனநிலை காரணமாகவே அந்த நேரத்தில் அவரது நடவடிக்கை அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.








