Aug 31, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட தேசிய தின விழா – கண்கலங்கிய முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யுசோ
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்ட தேசிய தின விழா – கண்கலங்கிய முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யுசோ

Share:

மலாக்காவில் மாநில அளவிலான 2026 தேசிய தினக் கொண்டாட்டம் நிறைவடைந்த போது, முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தேசிய தின நிகழ்ச்சிகளில் மலாக்கா மக்கள் பெருமளவில் கலந்து கொண்டதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“மலாக்கா பெர்செலாவாட்” (Melaka Berselawat) நிகழ்வுடன் தொடங்கி, நேற்று நடைபெற்ற அம்பாங் மெர்டேக்கா நிகழ்ச்சியும், இன்று நடைபெற்ற பிரமாண்ட தேசிய தினக் கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆயிரக்கணக்கானோர் அல்ல... ஆயிரமாயிரமாக மலாக்கா மக்கள் கலந்து கொண்டதை நாங்கள் பார்த்தோம்,” என்று செய்தியாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தெரிவித்தார்.

பின்னர் நிகழ்விடத்தில் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்த அப்துல் ரவுஃப் யுசோ, புறப்படுவதற்கு முன் “நன்றி மலாக்கா” என்றும் கூறினார்.

இவ்வாண்டு முதல்முறையாக கிளேபாங் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தில், மலாக்கா மாநில ஆட்சியாளர் யாங் டிபெர்துவா நெகிரி துன் டாக்டர் முஹமட் அலி முஹமட் ருஸ்தாம் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் அஸ்மா அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 158 அணிவகுப்பு குழுக்களில் 12,000 பேர் பங்கேற்றனர். அரசு துறைகள், பாதுகாப்புப் படைகள், சீருடைப் பணியாளர்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அமைப்புகளின் 32 வாகனங்களும் அணிவகுப்பில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியைக் காண அதிகாலை 4 மணி முதலே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெர்சியாரான் ஜாலான் பந்தாய் கிளேபாங் பகுதியில் திரண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற முழுமையான தேசிய தின நிகழ்ச்சிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News