டிச. 30-
கோலாலம்பூரில் நடத்தப்பட்ட Op Lejang சோதனை நடவடிக்கையில் Geng Awey , Geng Alep ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களை காவல் துறையினர் கைது செய்தனர். Geng Awey கும்பலைச் சேர்ந்த 5 பேரும் Geng Alep கும்பலைச் சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Wangsa Maju மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Mohamad Lazim Ismail தகவல் வெளியிட்டார்.
விசாரணையில், இந்த கும்பல்கள் பூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பூட்டை உடைத்து அவற்றை திருடி, பின்னர் அவற்றை சட்டவிரோத பட்டறைகளில் பிரித்து உதிரி பாகங்களாக விற்றது தெரியவந்தது. முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இந்த உதிரி பாகங்கள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம் ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், ரஷ்ய சுற்றுலாப் பயணியை கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் காஜாங் சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது..








