கோலாலம்பூர், டிச.3-
நாட்டின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி.யில் ஜோ லோவுடன் சேர்ந்து நிதி முறைகேடுகளை புரிந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்கள் அந்த முதலீட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றதில் தெரிவித்தார்.
1MDB- யின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரிகளான டத்தோ ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹலிமி மற்றும் முகமட் ஹசேம் அப்துல் ரஹ்மான், 1MDB-யின் முன்னாள் வழக்கறிஞர் ஜஸ்மின் லூய் அய் அவான்,தமது முன்னாள் சிறப்பு அதிகாரி டத்தோ அம்ஹாரி எப்பெண்டி நஷருடின் மற்றும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி அஸ்மி தாஹிர் ஆகியோரே மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவுடன் கூட்டுச் சேர்ந்து 1எம்டிபி.யில் நிதி முறைகேடு புரிந்துள்ளனர் என்று நஜிப் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.
ஜோலோவுடன் சேர்ந்து இந்த கூட்டு சதியில் ஈடுபட்டு பெரும் நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள மேற்கண்ட நபர்கள், தமக்கு எதிரான இந்த வழக்கில் பிராசிகியுஷன் சாட்சியாக அழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நஜீப் வாதிட்டார்.
காரணம், தாம் கூறிய இந்த நபர்கள் அனைவரும் கோலாலம்பூர், ஜாலான் கியா பெங்கில் இருந்த ஜோலோவின் வீட்டில் அடிக்கடி அவரை சந்திப்பது உண்டு என்று நஜீப் குறிப்பிட்டார்.








