கோலாலம்பூர், நவம்பர்.24-
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கிய கனமழை, இன்று திங்கட்கிழமை பிற்பகலிலும் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, கரைபுரண்டோடுகிறது.
இடை மழையினால் கோலாலம்பூர், செபூத்தே, தாமான் யுனைடெட், ஜாலான் செப்பாடு 6 பகுதியில் நிலச்சரிவு மற்றம் நில அமிழ்வு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மலிவு விலையிலான இரண்டு அடுக்குமாடி கட்டடத் தொகுதிகளின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை மையம் காலை 11.02 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றது.
செபூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டியில் 11 வீரர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நிலச்சரிவு 60 மீட்டர் பரப்பளவில் ஏற்பட்டுள்ளது என்று தீயணைப்பு நிலையத்தின் தலைவர் தலைவர் அர்ம்டான் ஹஜி மஹாட் கூறினார்.
ஒரு கார் புதையுண்டுள்ளது. மற்றொரு கார் கவிழ்ந்துள்ளது. பல மோட்டார் சைக்கிள்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
நிலச்சரிவின் தாக்கத்தை அருகில் உள்ள இரண்டு அடுக்குமாடி கட்டடத் தொகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் உணர்ந்தனர். மேலும் அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இரண்டு வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகப் பொறுப்பாளர்கள், கோலாலம்பூர் மாநகர் மன்றப் பொறியிலாளர்களுடன் நடத்தப்பட்ட விவாதத்திற்குப் பின்னர் நிலச்சரிவின் தாக்கம் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடப் பகுதிகளில் ஊடுருவும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு வீடமைப்புப் பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கிள்ளான் பள்ளத்தாக்கில் ஷா ஆலம் வட்டாரத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிள்ளான் ஆற்றில் நீர் கரைபுரண்டோடி அருகில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளக்காடாக்கியுள்ளது.
ஷா ஆலமில் மிக தாழ்வான பகுதி என்று கருதப்படும் ஸ்ரீ மூடாவில் வெள்ளம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி தற்போது அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த அடை மழையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள போதிலும் சிலாங்கூர் மாநிலத்தில் சுங்கை பெசார், பெஸ்தாரி ஜெயா, ஷா ஆலாம் மற்றும் புக்கிட் ஜெலுதோங் ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய இடர்மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.








