83 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சியாபு, எக்ஸ்டசி கைப்பற்றல்
கோலாலம்பூர், கூ ச்சாய் லாமாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 83 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 110 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 80 கிலோ சியாபு மற்றும் 30 கிலோ எக்ஸ்டசி அடங்கும். கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், கனடா கடவுச்சீட்டு வைத்திருந்த 36 வயது வியட்நாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மர்சூஸ் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மற்றொரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதில், உள்ளூர் சந்தைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கும்பல் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் ஆகஸ்ட் 20 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று ஃபாதில் மர்சூஸ் தெரிவித்தார்.








