சுத்தமற்ற, ஆபத்தான மற்றும் கடினமான பணிகளைக் கொண்ட 3D துறைகளில், முதலில் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மைபியூச்சர்ஜோப்ஸ் தளம் மூலம் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், மலேசியர்களிடமிருந்து வெறும் 352 விண்ணப்பங்களே கிடைத்ததாக அவர் கூறினார்.
உள்ளூர் மக்கள் அந்த வேலைவாய்ப்புகளை ஏற்காத பட்சத்தில்தான், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லது பிற தரப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ரமணன் விளக்கினார்.
இன்று மதியம் புத்ராஜெயா, மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற 'ஆகஸ்ட் மாத கெசுமா மாதாந்திர கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தையொட்டி தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
3D துறைக்காக 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களை உடனடியாகப் பணியமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தி, நாட்டில் உள்ள குடியுரிமையற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்கையில் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு தெரிவித்தார்.








