கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் குடிநுழைவுத் துறை லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், குடிநுழைவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிகாலை 1 மணியளவில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக செள கிட் நோக்கிச் சென்ற குடிநுழைவுத் துறையின் ‘பிளாக் மரியா’ லாரி, சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக நம்பப்படுகிறது.
அப்போது பச்சை விளக்கில் நேராக வந்த புரோட்டோன் சாகா காருடன் மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை மோதியது. இதில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் மீதான விசாரணையில் அலட்சியம், தவறான நடத்தை அல்லது சட்ட மீறல் இருப்பது தெரியவந்தால், பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைஃபுதீன் நசுத்தியோன் எச்சரித்துள்ளார்.








