சைபர்ஜெயா, ஜனவரி.27-
கசிவுகள், மோசடிகள் மற்றும் பொதுச் சொத்துத் திருட்டு ஆகியவற்றால், மலேசியா இழந்த பொது நிதியின் உண்மையான தொகையானது, கடந்த இரண்டு ஆண்டுகளாக மீட்கப்பட்ட15.5 பில்லியன் ரிங்கிட்டை விட கூடுதலாக இருக்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
என்றாலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைத் தொடர்வதன் மூலம், மேலும் கூடுதலான பொது நிதியைச் சேமிக்க முடியும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய கணிசமான தொகையை மீட்டெடுத்ததில் எஸ்பிஆர்எம், பிடிஆர்எம், உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சு மற்றும் பல்வேறு சட்ட அமலாக்க பிரிவுகளின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக நேற்று நடைபெற்ற 44-வது உலக சுங்க தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அன்வார் தெரிவித்தார்.
மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்காக இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாகச் செயல்பட்டதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், உள்துறை அமைச்சர் டத்ய்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.








