பகாங் மாநில பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள், அடுத்த மாநிலத் தேர்தல் வரை மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில்-க்கு தங்களது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கோலா செந்துல் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்ரி ஜமாலுடின் மற்றும் லெபார் சட்டமன்ற உறுப்பினர் யாசிட் யூனுஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த முடிவு பெர்சத்து கட்சியின் உயர்மட்டத் தலைமையுடன் ஆலோசித்த பின்னர் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
பகாங் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதுடன், தங்களது தொகுதி மக்களின் நலனையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோலா செந்துல் மற்றும் லெபார் தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலன்களுக்கு மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், மாநில நிர்வாகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு, மக்களின் வளர்ச்சி, நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தங்களது பணிகளைத் தொடரப்போவதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
42 உறுப்பினர்களைக் கொண்ட பகாங் மாநில சட்டமன்றத்தில் தற்போது பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் இணைந்த ஒற்றுமை ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாரிசானுக்கு17 இடங்களும், பக்காத்தான் ஹராப்பானுக்கு 8 இடங்களும் என இந்த கூட்டணிக்கு மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
இதனிடையே பெரிக்காத்தான் நேஷனல் 17 இடங்களைக் கொண்டுள்ளது.
அதில் 15 இடங்கள் பாஸ் கட்சியின் வசமும், மீதமுள்ள இரு இடங்கள் பெர்சாத்துவைச் சேர்ந்த ஜஸ்ரி மற்றும் யாசிட் வசமும் உள்ளன.
இதனிடையே, பெர்சத்துகட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசல் அசுமு கூறுகையில், இரு சட்டமன்ற உறுப்பினர்களும் வான் ரோஸ்டி-க்கு ஆதரவு வழங்க விரும்புவதாக கட்சித் தலைமையிடம் தெரிவித்ததாகவும், இந்த விவகாரத்தை கட்சியின் முடிவுக்கே விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான கட்சியின் அரசியல் பிரிவு இந்த விவகாரத்தை பல்வேறு கோணங்களில் பரிசீலித்து, கொள்கையளவில் இருவரின் முடிவுக்கும் ஆதரவு தெரிவித்ததாக அஹ்மத் ஃபைசல் அசுமு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜஸ்ரி ஜமாலுடின் மற்றும் யாசிட் யூனுஸ் ஆகியோர் வான் ரோஸ்டி-யுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








