ஜோகூர் லிங்கெடுவா விரைவுச்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடந்ததாக சமூக ஊடகங்களில் வைரலான காணொளி தொடர்பாக மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி வெளியிட்டுள்ள தகவலில், 20 முதல் 40 வயதிற்குட்பட்ட மூன்று சந்தேகநபர்கள், அத்துறையின் புலனாய்வு மற்றும் நடவடிக்கை பிரிவு மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் Sentul பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் சுற்றிவளைத்த போது மூன்று சந்தேகநபர்களும் தப்பியோட முயன்றதாகவும், எனினும் போலீஸ் குழுவினர் அவர்களை வெற்றிகரமாக மடக்கிப் பிடித்ததாகவும் முஹம்மது ஹஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.








