புக்கிட் காயூ ஈத்தாம், பிப்ரவரி.28-
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் கமாண்டர் சுடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு உள்ளூர் நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று புக்கிட் காயூ ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், சோதனை சாவடி வளாகத்திற்குப் பணி நிமித்தமாக வருகை தந்த உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
51 மற்றும் 58 வயதுடைய இருவர் நேற்று இரவு புக்கிட் காயூ ஈத்தாம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் பிடிபட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒரு தாய்லாந்து பெண் உட்பட மொத்தம் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக 22 முதல் 52 வயதுடைய 7 பேர் நான்கு வெவ்வேறு சோதனைகளில் பிடிபட்டதாக சைஃபுடின் விளக்கினார்.








