அலோர் ஸ்டார் அருகே உள்ள பெக்கான் சிம்பாங் குவாலா பகுதியில் 14 வயது மாணவியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 8.26 மணியளவில் நடந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்துள்ளார்.
நேற்று அம்மாணவி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், மாணவின் முகத்தை கையால் மூடி பிடித்துக் கொண்டு இழுத்துச் செல்ல முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், அம்மாணவி தைரியமாக சந்தேக நபரின் கையைக் கடித்து தப்பித்து ஓடி அருகிலிருந்த டியூஷன் மையத்தில் புகலிடம் தேடி உதவி கேட்டுள்ளார்.
இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக அம்மாணவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 363, பிரிவு 511 மற்றும் 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் பிரிவு 14-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








