கோலாலம்பூர், ஏப்ரல்.26-
அதிகரித்து வரும் செலவினங்களுக்கும் உலகளாவிய சவால்களுக்கும் மத்தியில் மலேசியா தனது போட்டித்தன்மையை நிலைநாட்ட, உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதே அரசின் முக்கிய இலக்காகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். பழைய அணுகுமுறைகளைத் தவிர்த்து, தானியங்கி முறை, டிஜிட்டல் மயமாக்கல், புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்த தொழில்துறையினர் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற வணிகச் சமூகத்துடனான சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி முறை மிக முக்கியமானது என்றும், தற்போது எஸ்பிஎம் முடித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இவ்வழியைத் தேர்ந்தெடுப்பதால் 95 விழுக்காட்டிற்கும் அதிகமான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைகளை எதிர்கொள்ள விநியோகச் சங்கிலியை ஒரே மூலத்தைச் சார்ந்திருக்காமல் பல்வகைப்படுத்துவது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.








