இம்மாத தொடக்கத்தில் ஜாலான் அம்பாங் பகுதியில் தம்பதியர் இருவர் பலியான கொடூர வாகன விபத்து தொடர்பாக, 24 வயது கல்லூரி மாணவர் மீது இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரட்டைக்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
டேனிஷ் ராமன் குமார் குமரேசன், என்ற அந்த கல்லூரி மாணவர், மா ஜிஸ்திரேட் நுருல் இசா ஹசன் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்ப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அந்த மாணவர் அமைதியாக காணப்பட்டார்.
கடந்த மே 2ஆம் தேதி காலை 5.30 மணியளவில், கோலாம்பூர் ஜாலான் அம்பாங்கில் மோட்டார் சைக்கிளில் சென்ற 61 வயது ஏ. துரைசிங்கம், 56 வயது அவரது மனைவி ஏ. மேனகா ஆகியோர் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.
கிளீனீகல்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மனைவியை, கணவர் எப்போதும் போல காலையில் வேலைக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் டேனிஷ் ராமன் குற்றச்சாட்டை எதி ர்நோக்கியுள்ளார்.
அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கில் தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று உயிரிழந்த தம்பதியரின் குடும்ப உறுப்பினர்கள், நீதிமன்றத்திற்கு வெளியே கண்ணீருடன் தெரிவித்தனர்.








