ஜோகூர் பாரு, பிப்ரவரி.04-
ஜோகூர் மாநிலத்தையே உலுக்கியுள்ள கங்கார் பூலாய் (Kangkar Pulai) மர்மக் கொலை வழக்கில், புதிய திருப்பமாக இரு சகோதரர்கள் மீது இன்று ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மக்கள் நடமாட்டம் இல்லாத செம்பனைத் தோட்டத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எலும்புக்கூடுகளின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி நீங்குவதற்குள், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 32 வயது ஆர். அரசன் மற்றும் அவரது சகோதரர் 36 வயது ஆர். யுதேஸ் ஆகிய இரு இந்தியச் சகோதரர்கள் மீது சட்டத்தின் பிடி இறுகியுள்ளது.
கங்கார் புலாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் இரு சகோதரர்கள் மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நபிலா நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இரண்டு சகோதர்களுக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பிலிருந்த விடுபட்ட ஒரு செம்னைத் தோட்டத்திலுள்ள எண்ணிடப்படாத ஒரு வீட்டில் 28 வயதுடைய ஒருவரைக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இவ்விரு சகோதர்களும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.
முன்னதாக, கங்கார் பூலாயில் உள்ள செம்பனைத் தோட்த்தில் தீயில் சாம்பலான ஒரு வீட்டிலிருந்து மூன்று சிறுவர்கள் மற்றும் ஓர் இளைஞர் உட்பட ஆறு பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 9-ஆம் செம்பனைத் தோட்டத்தில் உள்ள அந்த பாழடைந்த வீட்டில் 6 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களாகத் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் தேடிக் கொண்டிருந்த 48 வயது நபர் ஒருவர் எரிந்து சாம்பலான அந்த பாழடைந்த வீட்டில் இந்த எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தார்.
பிரிந்து வாழ்ந்த தனது மனைவியும் குழந்தைகளும் அந்த வீட்டில்தான் தங்கியிருந்ததாக அந்த நபர் கூறினார் என்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அப்துல் ரஹமான் தெரிவித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அந்த நபர் இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த அந்த வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இருந்ததாகவும், அங்கு நீர் அல்லது மின்சார வசதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கொலை தொடர்பான ஆய்வில் ஜோகூர் தடவியல் போலீசார் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.








