கோலாலம்பூர், ஜூன்.01-
மலேசிய மக்கள் அனைவரும் நாட்டின் தேசியக் கோட்பாடான 'ருக்குன் நெகாரா'வின் சிறப்புகளை தங்களின் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சீல் கேட்டுக் கொண்டார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இஸ்தானா நெகாரா விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஃபாஹ்மி இதனைத் குறிப்பிட்டார்.
நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணுவதற்கு மாமன்னரின் இந்த அறிவுரை மிக முக்கியமானது என்று அமைச்சர் கூறினார். குறிப்பாக, நாட்டின் இருண்ட பக்கங்களில் ஒன்றான மே 13 சம்பவத்தை மாமன்னர் நினைவூட்டியுள்ளதை அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்தல் காலங்களில் தங்களின் சுயவிளம்பரத்திற்காக அரசியல் தலைவர்கள் உணர்ச்சிகரமானப் பிரச்சினைகளைத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொது வெளியில் பேசும்போது கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாமன்னர் விடுத்த அழைப்பை அரசியல்வாதிகள் அனைவரும் ஏற்று நடப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி தெரிவித்தார்.








