கோலாலம்பூர், பிப்ரவரி.26-
இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின், உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றார்.
இதற்கு முன்பு சுமார் 35 விழுக்காடு செயல்பட்டு வந்த அவரது இதயமானது தற்போது மேம்படத் தொடங்கியுள்ளதாக ஹாஷிமின் மகள் ஹுஸ்னா தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் உடல்நிலையானது தற்போது சிறப்பாகப் செயல்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அவருக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 87 வயதான ஹாஷிம் ஜாசின், பினாங்கு மருத்துவமனையில் நடந்த இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சையில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
இருப்பினும், அவரைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ஆம் ஆண்டு, பாஸ் கட்சியின் உலாமா மன்றத்தால், ஹாஷிம் நான்காவது ஆன்மீகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன்பு மூன்று முறை சங்லாங் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஹாஷிம் பதவி வகித்துள்ளார்.








