கோலாலம்பூர், ஜனவரி.12-
ரத்து செய்யப்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் மற்றும் இடைநிலைப்பள்ளிக்கான பிடி3 ஆகிய பொதுத் தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆண்டு ஒரு விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பு தேசியக் கல்வி ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பெற்றோர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்களின் கருத்துக்கள் இந்த ஆய்வில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
B பிரிவு மாநிலங்களுக்கான புதிய கல்வியாண்டு இன்று தொடங்கி, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் காலையில் ஷா ஆலாம், Ladang Regent சீனப்பள்ளிக்கு, கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோவுடன் நேரில் வருகை புரிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிம் பேசுகையில் ஃபாட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.
யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் குறித்த இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகே இந்தத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படுமா அல்லது மாற்று வழிகள் பின்பற்றப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
இது ஒரு முக்கியமான முடிவு என்பதால், முழுமையான ஆய்வை மேற்கொள்ள கல்வி அமைச்சிற்குச் சிறிது காலம் அவகாசம் அளிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.








