சிரம்பான், நவம்பர்.16-
நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ரஹாங்கிலிருந்து கம்போங் கொண்டோக் வரை ஒரு மணி நேரம் நீடித்தத் திரைப்பட பாணிச் துரத்தலுக்குப் பிறகு, மின்கம்பி திருட்டுக் கும்பலைச் சேர்ந்த இருவரைச் சிரம்பான் காவற்படை அதிரடியாகக் கைது செய்தது. சந்தேக நபர்கள் ஓட்டி வந்த சாம்பல் நிற Honda Civic FD கார், பொது வாகனத்தின் மீது மோதி பின்னர் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, ஐந்து பேர் கொண்ட கும்பலில் இருவர் பிடிக்கப்பட்டதாக சிரம்பான் மாவட்டக் காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் அஸஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
பிடிபட்ட இருவரிடமும் மின்கம்பி வெட்டிகள், சம்மட்டிகள், 'TM' என எழுதப்பட்ட ஆடைகள், எரிக்கப்பட்ட செம்புக் கம்பிகள் உள்ளிட்டப் பல்வேறு திருட்டுக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் methamphetamine போதைப் பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் முறையே 25, 35 குற்றப் பதிவுகளைக் கொண்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.








