நாட்டின் பொருளாதாரச் சூழலைக் கருதி அமைதியையும் நிலைத்தன்மையையும் காக்க வேண்டும், இது மோதலுக்கான நேரம் அல்ல என நெகிரி செம்பிலான் அரசியல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் மந்திரி பெசாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அங்கு அரசியல் குழப்பம் நீடிப்பதால் , இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் அன்வார், நாடு பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், இது பதவிக்காகப் போராடும் நேரமல்ல என்றும், அமைதியையும் நிலைத்தன்மையையும் பேணுவதே முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சிக்கலைத் தீர்ப்பது எளிதல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாகத் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடியைச் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பாரிசான் நேஷனல் கூட்டணியின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ள ஜசெக இளைஞர் அணி, அக்கூட்டணியுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.








