ஜோகூர் பாரு, பண்டார் பாரு ஊடா பகுதியில் 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட 54 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 1 மணி அளவில் கருப்பு நிற காரில் வந்த அந்த நபர், சிறுமிகளிடம் வழி கேட்பது போல நடித்து அநாகரீகமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், நேற்று இரவு 11 மணியளவில் மாசாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அந்த நபரைப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம் என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.








