14 வயது மாணவி ஜி. கெசியா நிஷா உயிரிழந்த சம்பவத்தில், தனது மகள் பள்ளியில் பகடிவதை செய்யப்பட்டதைத அறிந்திருந்ததாகவும், தற்போது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தனது ஒரே கோரிக்கை என்றும் தாயார் கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தாயாரின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கித் தரப் போவதாக கெசியா கூறியிருந்தார். அந்தப் பரிசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியதை நினைவுகூர்ந்த கஸ்தூரி, அது தனது மகள் விட்டுச் சென்ற கடைசி நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.
நடிகையாகி பிரபலமாக வேண்டும் என்ற கனவும் மகளுக்கு இருந்ததாக அவர் கூறினார். ஆனால், இப்படிப்பட்ட துயரமான முறையில் தனது மகளின் பெயர் அனைவராலும் அறியப்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.
தனது மகள் அனுபவித்த மன அழுத்தம் மற்றும் பகடிவதை குறித்து தாயார்–மகள் இடையிலான உரையாடல்களின் மூலம் அறிந்திருந்ததாகவும் கஸ்தூரி கூறினார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 92 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பகடிவதை குற்றம் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 507B பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோக் ஃபடில் மர்சூஸ் தெரிவித்துள்ளார்.








