ஜோகூர், லின்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்காக சாலையை மூடிய சம்பவத்தில், சமூக ஊடக பிரபலம் ஒருவர் உட்பட எட்டு பேர் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
26 முதல் 45 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடந்த சனிக்கிழமை காலை, ஜோகூர், செனாய் உத்தாரா டோல் சாவடி முதல் ஜோகூர் பிரீமியம் அவுட்லெட் பகுதி வரை, சிலர் நெடுஞ்சாலையை மறித்து, இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
33 விநாடிகள் கொண்ட அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் எட்டு பேரையும் கைது செய்தனர்.
பந்தயம் முடிந்ததும் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சிகளும் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.








