கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியுதவி திட்டமான BRIEF-i க்கு கூடுதல் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இருப்பது, இதுவரை நிதி பெற்ற 577 பேருடன் இந்திய தொழில்முனைவோர் சமூகத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

நிதியுதவி பெற்றவர்களின் இந்த மொத்த எண்ணிக்கையில் 482 பேர் மைக்ரோ தொழில்முனைவோர் என்றும், மற்ற 95 பேர் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

BRIEF-i நிதியுதவி வழங்கும் ஒரு திட்டமாக இருந்தாலும், இந்தியத் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை விரிவாக்கம் செய்து கொள்ள உதவுவதில் அது முக்கியப் பங்காற்றுகிறது என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பேங்க் ரக்யாட் இரட்டை கோபுரத்தில் இன்று நடைபெற்ற BRIEF-i திட்ட விளக்கமளிப்பு நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் பேங்க் ரக்யாட், அமானா இக்தியார் மலேசியா, தெக்குன் மற்றும் எஸ்எம்இ கோர்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் 18 தொழில்முனைவர்களுக்கு மொத்தம் 3.275 மில்லியன் ரிங்கிட் காசோலைகளை ரமணன் வழங்கினார்.

BRIEF-i திட்டத்தைத் தவிர இந்திய சமூகத்திற்காக மேலும் மூன்று திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் ரமணன் சுட்டிக் காட்டினார்.

இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கான PENN (பெண்), சொந்த வர்த்தகங்களை நடத்தி வரும் இந்திய வணிகர்களுக்கான IBAP ( ஐ பாப் ) மற்றும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான SPUMI ( ஸ்பூமி) ஆகியவையே அந்த மூன்று திட்டங்களாகும் என்று ரமணன் சுட்டிக் காட்டினார்.

இதுவரை இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 11 ஆயிரத்து 300 - க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டங்களின் வாயிலாகப் பயன் பெற்று, முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று ரமணன் தெரிவித்தார்.








