Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஆனந்தகிருஷ்ணனின் நன்கொடைகள் வெளியில் தெரியக்கூடாது
தற்போதைய செய்திகள்

ஆனந்தகிருஷ்ணனின் நன்கொடைகள் வெளியில் தெரியக்கூடாது

Share:

கோலாலம்பூர், டிச.2-


மறைந்த பிரபல தொழில் அதிபர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், சமூக நற்காரியங்களுக்காக வழங்கிய நன்கொடைகள் எதுவும் வெளியில் தெரியக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்பைடயில்தான் அந்த நன்கொடைகளை வழங்குவார் என்று அவரின் பாலிய நண்பரான மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஏ. வைத்திலிங்கம் தெரிவித்தார்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல தாம் வழங்கக்கூடிய நன்கொடைகள் அநாமதேயமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தவர் என்று டான்ஸ்ரீ ஆனந்தி கிருஷ்ணனின் நீண்ட கால நண்பரான டத்தோ வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக தாம் பொறுப்பேற்று இருந்த காலத்தில் இந்து சங்கத்தை ஆதரிப்பதில் ஆனந்த கிருஷ்ணன் அதீத ஈடுபாடு காட்டியதையும் வைத்திலிங்கம் நினைவுகூர்ந்தார்.

எத்தகைய நன்கொடையை வழங்கினாலும் தயவு செய்து என்னுடைய பங்களிப்புக்கு எனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கூறிவிடுவார். மலேசிய சமூக கல்வி அறக்கட்டளைக்கு ஆனந்திகிருஷ்ணன் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை மலேசிய இந்து சங்கத்திற்கு தலைவராக இருந்த வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.

கல்வியில் சிறந்தவர்களும், புறப்பாட நடவடிக்கைகளில் ஆர்வமாகப் பங்கு பெறுகின்றவர்களுக்கு மட்டுமே பயில வாய்ப்பு வழங்கப்படும் கோலாலம்பூரில் சிறந்தப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் விக்டோரியாப் பள்ளியில் ஆனந்த கிருஷ்ணனுடன் பயின்ற காலத்தில் அவர் கல்வியில் மிகச்சிறந்து விளங்கினார் என்று வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.

ஹாக்கி, கால்பந்து, நீச்சல், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் தாம் ஆர்வமாக இருந்தாலும் ஆனந்தகிருஷ்ணன் படிப்பில்தான் ஆர்வமாக இருந்ததாக அகப்பக்கம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

1953 ஆம் ஆண்டில் விக்டோரியா பள்ளியில் நடைபெற்ற வரலாறு மன்றம் தேர்தலில் தலைவர் பதவிக்கு தமது பெயரை முன்மொழிந்தவர் ஆனந்தகிருஷ்ணன் என்பதையும் வைத்திலிங்கம் நினைவுகூர்ந்தார்.

Related News