புத்ராஜெயா,செப்டம்பர் 03-
மலேசியாவின் அரசு கேந்திரமாக விளங்கும் புத்ராஜெயாவின் அழகுக்கும், வளர்ச்சிக்கும், நேர்த்திக்கும் நிகராக உலகில் எந்த நகரமும் இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.
புத்ராஜெயாவின் தனித்துவமான வனப்பை, இம்மியளவும் குறையாமல் பாதுகாத்து வரும் அதன் பராமரிப்பு நிர்வாகத்திற்கு தமது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்வதாக தனது முகநூலில் இன்று பதிவேற்றம் செய்த செய்தியில் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
Prang Besar தோட்டமாக விளங்கிய ரப்பரும், செம்பனையும் நிறைந்த ஒரு தோட்டப்பகுதியான புத்ராஜெயா, துன் மகாதீரின் தூர நோக்கு சிந்தனையில் கோலாலம்பூர் அரசு கேந்திரத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்ட நாட்டின் நிர்வாக நகரமாகும்.
2 ஆயிரத்து 50 கோடி வெள்ளி செலவில் அதன் கட்டுமானப்பணி 1994 ஆம் ஆண்டில் தொடங்கி, 1999 இல் நிறைவு பெற்றது. 2001 ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேசத்தின் ஒரு பகுதியாக புத்ராஜெயா பிரகடன்படுத்தப்பட்டது.
புத்ரஜெயாவிற்கு செல்லும் சாலைகளின் இரு மருங்குகளிலும் பூத்துக்குலுங்கும் மலர்தோட்டங்கள். நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட அழகிய பூ வேலிகள், நிழல் தரும் மரங்கள், ரம்மியமான சூழல், சாலைகளுக்கு இடையே மாறுப்பட்ட கலைவேலைப்பாடு கொண்ட கட்டடங்கள் முதலியவை அதன் வனப்பிற்கு மெருகு சேர்க்கின்றன என்று துன் மகாதீர் குறிப்பிடுகிறார்.
இப்படியொரு அமைப்பு முறை, உலகில் வேறு எங்கும் இல்லை என்று நாட்டின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றிருந்த போது தனது சிந்தனா சக்தியில் உருவாகிய புத்ராஜெயா குறித்து துன் மகாதீர் இவ்வாறு வர்ணித்துள்ளார்.








