பத்து பஹாட், ஜூலை.05-
பொதுமக்களின் பணத்தை திருடுபவர்கள் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தனது தலைமையிலான அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், தம்மை பதவியில் இருந்து அகற்ற சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு Batu Pahat-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அன்வார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிலம், அரசாங்கத் திட்டங்கள், பங்குகள் அல்லது தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதை தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று வலியுறுத்தினார்.
மேலும், தூய்மையான நிர்வாகம் மற்றும் மக்களின் நலனை மேம்படுத்தும் விரிவான மாற்றங்களை கொண்டு வர, ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்காளர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட, ஜோகூரில் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்த மாநில அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
ஜோகூருக்கு பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, வீடமைப்பு, மக்கள் நலன், உள்கட்டமைப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதை அவர் சுட்டினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலானது வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








