செரம்பன் , ஆகஸ்ட் 21-
நெகிரி செம்பிலான்-இல் உள்ள அனைத்து பல்பொருள் கடை மற்றும் சந்தை வியாபாரிகள் மக்கும் தன்மை கொண்ட நெகிழி பைகள் உட்பட எந்தவொரு நெகிழி பைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான ஒவ்வொரு நெகிழி பைக்கும் தலா 0.20 சென் வசூலிக்கும் வியாபாரிகள் இன்னும் இருப்பதை நெகிரி செம்பிலான் மாநில உள்ளாட்சி மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து குழுவின் தலைவர் J. அருள் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
வணிகர்கள் மக்கும் நெகிழி பைகளை பயனீட்டாளர் கோரிக்கைக்கு ஏற்ப இலவசமாக வழங்கலாம்; ஆனால், அவர்களிடத்தில் கட்டணம் விதிக்க முடியாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
அதேவேளை, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் oxo-degradable வகை போன்ற தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வழங்கும் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் இன்னும் உள்ளதாகவும் J. அருள் குமார் கூறினார்.
நெகிழி பைகள் பயன்பாட்டு குறித்து விதிக்கப்பட்டுள்ள விதிகளை மீறும் வணிகர்களுக்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும், செலுத்தத் தவறினால் அவர்கள் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் விவரித்துள்ளார்.








