மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டறியும் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய தேடுதல் பணிகளை 'ஓஷன் இன்ஃபினிட்டி' (Ocean Infinity) நிறுவனம் நிறைவு செய்துள்ளது.
இந்தத் தேடுதல் வேட்டையிலும் மாயமான விமானம் குறித்த புதிய தகவல்களோ அல்லது தரவுகளோ கிடைக்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் பிளங்கெட், கூறுகையில், "எங்கள் தேடுதல் கப்பல் கடந்த ஜனவரி 23-ஆம் தேதியே அதிகாரப்பூர்வமாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டது. 2018-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்திற்காக 151 நாட்களைக் கடலில் செலவிட்டுள்ளோம். சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கடற்பரப்பை வரைபடமாக்கி ஆய்வு செய்துள்ளோம்.
கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தகவலையும் பயன்படுத்தித் தேடினோம், ஆனால் இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் எங்களால் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை," என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தேடுதல் பணியானது புவியியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு மிகப்பெரிய சவாலான காரியம் என்று குறிப்பிட்ட அவர், "2018-ஆம் ஆண்டில் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் துல்லியத்துடனும் இந்த முறை தேடுதல் நடைபெற்றது.
அறிவியல் நுணுக்கங்கள், தானியங்கி தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான தேடுதல் வேட்டையை எங்கள் குழு நடத்தியுள்ளது. முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டாலும், எங்கள் குழுவின் உழைப்பைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன், என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








