சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின்'லிண்டுங் 24 ஜாம்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதியுதவி விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஜூலை மாதத்தில் மும்மடங்கிற்கும் மேலாக கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் 616 ஆக இருந்த விண்ணப்பங்கள், ஜூலையில் 2,135 வழக்குகளாக அதிகரித்துள்ளதாக பெர்கேசோ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் 31 வரையிலான காலகட்டத்தில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வெறும் ஐந்து நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு, மொத்தம் 2,508 பயனாளிகளுக்கு 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் பெரும்பாலான பகுதி, அதாவது 2.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி, விபத்துக்குள்ளான சந்தாதாரர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உபகரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக ஊனமுற்றோருக்கான வருமான இழப்பீடாக எட்டு லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 4.69 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வேலை நேரத்தைத் தாண்டி, 24 மணி நேரமும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம் தற்காலிகமாக ஒரு விருப்பத் தேர்வாக இருந்தாலும், வேலைக்கு வெளியேயும் ஏற்படும் விபத்துகளிலிருந்து தங்களையும், தங்களின் குடும்பத்தாரையும் நிதிச் சுமையிலிருந்து பாதுகாக்க தொழிலாளர்கள் உடனடியாக இதில் இணையுமாறு பெர்கேசோ வலியுறுத்தியுள்ளது.








