ஷா ஆலாம், பிப்ரவரி,04-
கிள்ளான் மற்றும் பந்திங் ஆகிய பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. அவர்களைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் களத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் தொடர்பில் குற்றச் செயல்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து சிலாங்கூர் போலீசார் ஒத்துழைப்பு நல்கி வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் இன்று தெரிவித்தார்.
தற்போதைய புலனாய்வின் மூலம் முக்கியத் தடயங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்களை இப்போது வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.
கைது நடவடிக்கைகள் அல்லது முறைப்படியான குற்றச்சாட்டுகளைக் கொண்டு மட்டுமே விசாரணையின் முன்னேற்றத்தைக் கணக்கிட முடியாது என்றும், போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த ஜனவரி மாதம் கிள்ளான் மற்றும் பந்திங் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, குண்டர் கும்பல் பகை காரணமாக இந்த வன்முறை நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, மக்கள் பகல் நேரத்திலேயே வெளியே வர அஞ்சும் சூழல் நிலவுவதாகக் கவலை தெரிவித்தார். போலீசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








