கோலாலம்பூர், நவம்பர்.24-
கோலாலம்பூர், லெம்பா பந்தாய் வட்டாரத்தில் உள்ள இந்தியர்களுக்காக இணைய மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. IPPTAR ( இப்தார் ) எனப்படும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணவு கருத்தரங்கை தொடர்புத்துறை அமைச்சரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஃபாமி ஃபாட்சீல் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.

இந்திய சமூகத்தின் மத்தியில் பல்வேறு வகையான இணைய மோசடிகளை அடையாளம் காணவும், தவிர்க்கவும், புகாரளிக்கவும், அது தொடர்பான அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், நடைமுறைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் IPPTAR ( இப்தார் ) இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.
இணைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையை எதிர்கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் அதிகரித்து வரும் இணைய மோசடிச் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதே வேளையில் இது மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
லெம்பா பந்தாய் வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த இணைய மோசடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இவர்கள் அனைவரும் Pantai Ria PPR, PPR Kerinchi, PPR Seri Pantai, PPR Seri Cempaka, PPR Kampung Limau மற்றும் Flat Seri Pahang ஆகிய அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆவர்.

இணையப் பாதுகாப்பு மற்றும் வணிகக் குற்றத் துறையில் பரந்த அனுபவமுள்ள இரண்டு பேச்சாளர்களான பினாங்கு பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஏசிபி தேவன் ராமன் மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி துணை இயக்குநர் Ts. Katirawan Rajadran ஆகியோர் கலந்து கொண்டு இணைய மோசடி தொடர்பான தங்கள் அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவு விழா நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், அடுத்தாண்டு முதல் 16 வயதிற்குட்பட்ட இளம் வயதினர் சமூக வலைத்தளக் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் இந்த புதிய உத்தரவு கொண்டு வரப்பட்டு, இணைய வலைத்தளங்களிலிருந்து 16 வயதிற்கும் கீழ்ப்பட்ட அனைத்து பிள்ளைகளும் தடுக்கப்படுவர் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
பிள்ளைகள் இணையக் கைப்பேசித் தொலைத்தொடர்பு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதைத் தடுத்து, அவர்களுக்கான புறப்பாட நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பெற்றோர்களை டத்தோ ஃபாமி கேட்டுக் கொண்டார்.








